நானே வானத்தையும், பூமியையும் படைத்தவர். கடவுளோடும் தூய ஆவியோடும்
ஒன்றித்திருக்கும் கடவுள் நானே. நானே இறைவாக்கினரோடும், தலைமைக்
குருக்களோடும் பேசியவர். எனக்காகவே அவர்கள் எதிர்பாத்த்துக் காத்திருந்தனர்.
அவர்களது எதிர்பாத்தலின் நிமித்தமாகவும், நான் கொடுத்த வாக்குறுதியின்
பொருட்டும், பாவக்கறையின்றி மனித உருவெடுக்க, ஒரு கண்ணாடியில் சூரிய ஒளி
ஊடுருவதைப்போல நான் கன்னியின் வயிற்றிலே மனுவுருவானேன். சூரிய ஒளி ஊடுருவதால்
கண்ணாடி சேதமடைவதில்லை, அதேபோல நான் மனு உருவெடுத்ததால் என் தாயின்
கன்னிமை அழிந்துபோகவில்லை. இறைத்தன்மையோடு நான் மனித உருவெடுத்தேன்.
மனித உருவெடுத்து கன்னியிடம் கருவானதால், அனைத்தையும் படைத்து ஆட்சிசெலுத்தும்
பிதாவோடும், தூய ஆவியோடும் ஒன்றித்திருப்பதினின்று எந்தக் குறைவும்
எனக்கில்லை. எரியும் நெருப்பிலிருந்து ஒளியைப் பிரித்தெடுக்க முடியாது,
அதேபோல நான் மனித உருவெடுக்கும் போதும், எனது இறப்பின் போதும், எனது
இறைத்தன்மை என்னிடமிருந்து பிரிந்துவிடவில்லை.
மேலும், பாவமறியா தூய்மையான என் உடல் மனிதருடைய பாவங்களுக்காகவே, உள்ளங்கால்
முதல் உச்சந்தலை வரை காயங்களோடு பாடுபட்டு, சிலுவையில் தொங்க
வேண்டுமென்று நான் ஆயத்தமாக இருந்தேன். மக்கள் அனைவரும், நான் செய்யும்
நன்மைகளை தங்கள் மனதில் கொண்டு என்னை அதிகமாக அன்பு செய்ய வேண்டுமென்ற
கருத்திற்காகவே ஒவ்வொரு திருப்பலியும் அர்ப்பணமாக்கப்படுகிறது.
இருந்தபோதிலும், மக்கள் இப்போது என்னை முழுவதுமாக மறந்துவிட்டனர், என்னை
ஒதுக்கிவிட்டனர், தனது அரசாட்சியிலிருந்து விரட்டப்பட்ட அரசனைப்போல என்னைத்
துரத்திவிட்டனர். அதற்குப்பதிலாக சூனியக்காரத் திருடனான சாத்தானுக்கு புகழாரம்
சூட்டுகின்றனர்.
நானே மனிதனைப் படைத்து, அவனை மீட்டதால்,. எனது அரசாட்சியோடு மனிதர்களுடனே
இருக்க விரும்புகின்றேன். மேலும், நானே அவர்களுக்கு அரசரும், ஆண்டவரும் ஆகும்.
ஆனால், திருமுழுக்கின்போது எனக்களித்த வாக்குறுதிகளை இன்று அவர்கள் மீறி,
விசுவாசமற்றுப் போய்விட்டனர். நான் அவர்களுக்காகக் கொடுத்த சட்டங்களைப்
புறக்கணித்துவிட்டனர். தங்களது சொந்த விருப்பத்தை மட்டுமே அன்பு செய்கின்றனர்.
நான் சொல்வதைக் கேட்க முற்றிலுமாக மறுக்கின்றனர். ஆனால், சாத்தானையும் அவனது
செயல்பாடுகளையும் ஆதரித்து, எனக்கும் மேலாக அவனை நம்புகின்றனர். உண்மையாகவே
சாத்தான் ஒரு திருடன் தான். ஏனென்றால், எனது இரத்தத்தைச் சிந்தி நான்
மீட்டுக்கொண்ட ஆன்மாக்களை, தனது தீய சிந்தனையாளும், பொய் வாக்குறுதிகளாலும்
தன்வசம் ஈர்த்துக்கொள்கிறான். அவன் மிகுந்த பலமுடையவன் அல்ல. ஆனால், கடவுள்
மனிதனுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருப்பாதால், மனிதன் தனது
விருப்பப்படி பகைவனது தீய எண்ணங்களுக்கு செவி சாய்க்கிறான். எனவே, அவனுக்கு
ஏற்படும் துன்பங்களையும் அவன் ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளான்.
சாத்தான் கடவுளால் படைக்கப்பட்டபோது நல்லவனாகவே இருந்தான், ஆனால் தனது தீய
எண்ணத்தால் அவன் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டான். எனவே, பாவிகளுக்கு அளிக்கப்படும்
தண்டனையை நிறைவேற்றும் எனது ஊழியக்காரனாக இருக்கின்றான். மனிதர்களால் நான்
நிந்திக்கப்படுகிறபோதிலும், அவர்கள் என்னைக் கூவி அழைத்து, தங்களது
பாவங்களுக்காக தங்களைத் தாழ்த்திக்கொள்ளும்போது, அவர்களது பாவங்களை
மன்னித்து, அவர்களை தீய கள்வனான சாத்தானிடமிருந்து முழுவதுமாக விடுவிக்கும்
இரக்கம் கொண்டுள்ளேன். ஆனால், கடைசிவரை என்னை நிந்திப்பதைக் கைவிடாமல்
இருப்பவர்களை நான் நீதிமானாகச் சந்திக்கும்போது, அவர்கள் நடுநடுங்கி, “ஐயோ,
நாங்கள் கருவுற்றோம், பிறந்தோம், ஆனால் வல்லமைமிகுந்த ஆண்டவருக்கு
பெருங்கோபம் உண்டாக்கும் செயல்களைச் செய்துவிட்டோம்” என்று கதறி
அழுவார்கள்.
ஆனால், என் மகளே, எனக்காக என்னால் தேர்ந்துகொள்ளப்பட்டவளே, ஆத்மாவின் மூலம்
என்னோடு பேச தேர்ந்துகொள்ளப்பட்டவளே, உன் முழு உள்ளத்தோடு என்னை அன்பு
செய், உன் மகளையோ அல்லது மகனையோ அன்பு செய்வதைப்போல அன்று, இந்த
உலகிலுள்ள அனைத்தையும்விட அதிகமாக என்னை அன்பு செய். நான் உன்னைப்
படைத்தேன், என் அவயங்களில் ஒன்று கூட உனக்காக வேதனைபட்டதில்லை. நான் உன்னை
அதிகமாக அன்பு செய்கின்றேன். உன்னை இழப்பதைவிட, தேவைப்பட்டால் மீண்டும்
ஒருமுறை சிலுவையில் ஆணிகளால் அறையப்படவும் தயாராக உள்ளேன். நான் வானதூதர்கள்
போற்றும் மேன்மைமகு அரசனாக இருந்தும், சிலுவையினடியில் நிர்வாணமாக நின்று,
நிந்தை அவமானங்களுக்கு ஆளாகி, பொல்லாத வார்த்தைகளை எனது காதால்
கேட்குமளவிற்கும் என்னைத் தாழ்த்திக்கொண்டேன், எனது தாழ்ச்சியை கடைபிடி.
என் சித்தமே உனது சித்தமாக இருக்கவேண்டுமென்று பிரையாசைப்படு. ஏனென்றால்,
என் தாய், அன்னை மரியாள், முதலிலிருந்து கடைசிவரை அவருக்காக எதையுமே
விரும்பியதில்லை, எனது சித்தமே அவர்களது விருப்பமாக இருந்தது. நீயும் அவ்வாறு
செய்தால், உன் இதயம் எனது இதயத்தோடு ஐக்கியமாகும். காய்ந்த சருகு எளிதாக
தீப்பிடித்துக் கொள்வதைப்போல, எனது அன்பால் உன் இதயம் பற்றி எரியும். உன்
ஆன்மா எனது அன்பால் நிறையும், அதுபோல என் ஆன்மாவும் உனது அன்பால் நிறையும்.
எல்லாவிதமான தற்போதைய உலகளாவிய தேவைகளும் உனக்குக் கசப்பாக இருக்கும்,
அதுபோல, சிற்றின்ப ஆசைகள் விஷத்தைப் போலாகும்.
எந்தவித சிற்றின்ப ஆசையுமின்றி, மகிழ்ச்சியும், ஆன்மீக இன்பமும் நிறைந்த என்
தெய்வீக கரங்களில் நீ தஞ்சம் புகுந்துகொள்வாய். அப்போது உன் ஆன்மாவிற்குள்
ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படையாக உணரமுடியும். வேறு எந்தவிதமான மகிழ்ச்சியும்
இதற்கு ஈடாகாது. எனவே, உன் மனம் இந்த மகிழ்ச்சியைத் தவிர வேறு எதற்கும்
ஆசைப்படாது.
என்னை மட்டும் அன்பு செய். நீ விரும்புகின்ற அனைத்தையும் நீ நிறைவாகப்
பெற்றுக்கொள்வாய். ஏனென்றால், ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை
விதவையின் கிண்ணத்தில் எண்ணெய் வற்றாமல் இருக்கும் என்று இறைவாக்கினர்
சொல்லக் கேட்டதில்லையா? நானே உண்மையான இறைவாக்கினர். எனது வார்த்தைகளை
நம்பி அவற்றை நிறைவேற்றுபவருக்கு, எண்ணெயும், மகிழ்ச்சியும், அக்களிப்பும்
ஆரவாரமும் எல்லையில்லாக் காலத்திற்கும் குறைவுபடாது.
|