நானே விண்ணையும், மண்ணையும், கடலையும் மற்றும் இவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர். நானே பிதாவோடும், தூய ஆவியோடும் ஒன்றித்திருப்பவர். கற்களாலோ அல்லது தங்கத்தினாலோ செய்யப்பட்ட கடவுளல்ல. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என அன்று வாழ்ந்த மக்கள் நினைத்ததைப்போலவோ, சொன்னதைப் போலவோ இல்லாமல், ஒரே கடவுளாக, பிதா, சுதன், தூய ஆவி என்ற மூன்று பேராக வாழ்பவரான நானே அனைத்தையும் படைத்தேன். நான் வேறுஎவராலும் படைக்கப்பட்டவரல்ல. துவக்கமும் முடிவும் நானே! நானே இன்றும் என்றும் மாறாதிருக்கும் மேன்மை பொருந்திய கடவுள்.
நானே கன்னியின் வயிற்றிலிருந்து, தெய்வீகத்தன்மை அழியாமல் மனித சாயலில் பிறந்தவர். எனவே, நான் உண்மையுள்ள கடவுளின் மகனாகவும், கன்னியின் மகனாகவும் இருக்கின்றேன். நானே சிலுவையில் தொங்கி, மரித்து அடக்கப்பட்டவர். ஆயினும் எனது தெய்வீகம் என்னோடே இருந்தது. மனித சுவாபத்தில் நான் மரித்தபோது, கடவுளின் ஒரே மகனான எனது ஆன்மா எடுத்துக்கொள்ளப்பட்டதால், பிதாவோடும், தூய ஆவியோடும் தெய்வீகத்தன்மையோடு வாழ்ந்தேன்.
நானே சாவினின்று உயிர்த்தெழுந்து, விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டேன். இப்போது என் ஆன்மாவின் வழியாக உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர். என் இரகசியங்களை உனக்குக் காண்பிப்பதற்காகவும், அவை எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருப்பதாலும் நான் உன்னை எனது மணமகளாகத் தெரிந்து கொண்டேன்.
உன் மீது எனக்கு உரிமையுண்டு, ஏனென்றால், உனது கணவரின் இறப்பிற்குப் பிறகு, உனது அனைத்து விருப்பங்களையும் எனக்கு ஒப்புக்கொடுத்துவிட்டாய். அவரது இறப்பிற்குப் பிறகு, உன்னை எப்படித் தாழ்த்திக் கொள்வது, எனக்காக அனைத்தையும் முழுமையாக விட்டுவிடுவது என்ற கருத்துக்களே உனது எண்ணமாகவும், செபங்களாகவும் இருந்ததால் உன் மீது எனக்கு உரிமையுண்டு. உனது பேரன்பிற்காக என் இதயத்தில் நான் உனக்கொரு இடம் கொடுக்கவேண்டும். எனவே, உன்னை என் மணமகளாகத் தேர்ந்துகொண்டு, எனது விருப்பப்படி கடவுளுக்குரிய ஆன்மீக உறவை உனக்கு அளித்தேன்.
எனவே மணமகனின் திருமணத்திற்காக, தூய்மையாகவும்டூ நல்ல தயாரிப்போடும் இருப்பது மணமகளின் கடமையாகும். நீ செய்த பாவங்களை நினைத்துக்கொண்டிருந்தால் நீ எப்போதும் தூய்மையாக இருப்பாய். நான் உனது திருமுழுக்கின்போது உன்னை ஆதாமின் பாவக்கரையிலிருந்து தூய்மையாக்கியதுபோல, நீ ஒவ்வொரு முறையும் பாவத்தில் விழும்போது உன்னைக் காத்து உனக்கு ஆதரவளிக்கின்றேன். மணமகள் மணமகனின் அடையாளத்தை தனது மார்பில் எப்போதும் அணிந்திருக்கவேண்டும். அதாவது, நான் உனக்குச் செய்த நன்மைகளையும், சகாயங்களையும், நான் உன்னைப் படைத்ததையும்,. உனக்கு உடல், உயிர், உடல நலம் மற்றும் உலக இன்பங்களைக் கொடுத்தததையும், எனது மரணத்தின் மூலம் உன்னை உன் பாவங்களிலிருந்து மீட்டுக்கொண்டதையும் நினைவில் கொள்ளவேண்டும். மேலும், விண்ணுலகில் உனக்குரிய உரிமைப்பேற்றை நீ விரும்பினால் மட்டுமே அடைய முடியும் என்பதையும் எப்போதும் மனதில் கொள்வாயாக.
மணமகள் எப்போதும் மணமகனின் விருப்பத்தையே நிறைவேற்றவேண்டும். எனது விருப்பம் என்ன தெரியுமா? நீ மற்ற அனைத்தையும் விட என்னை அன்பு செய்யவேண்டும், நீ விரும்புவது நானாக மட்டுமே இருக்கவேண்டும். மனிதனுக்காகவே நான் அனைத்தையும் படைத்து, அவனுடைய கட்டுப்பாட்டிற்குள அவை அனைத்தையும் வைத்தேன். இருந்தபோதிலும், அவன் என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டு மற்ற அனைத்தையும் அன்பு செய்கிறான். அவனது மூதாதையர் இழந்த அனைத்தையும் அவனுக்கு நான் மீட்டுக்கொடுத்தேன். ஆனால், அவன் என்றும் நிலைத்திருக்கும் முடிவில்லா பேரின்பத்தை நாடாமல், மலைபோல் உயர்ந்து மண்ணோடு மண்ணாய்க் கலக்கும் கடல் அலைபோன்ற நிலையற்ற இன்பங்களையே நாடிச் செல்கிறான்.
என் மணமகளே, நீ என்னை மட்டும் விரும்பி, உன் குழந்தைகள், உறவினர், சொத்து, புகழ் மற்றும் அனைத்தையும் எனக்காக விட்டுக்கொடுத்ததால், நான் விலை மதிப்பற்ற உன்னதமான கொடையை உனக்குக் கொடுப்பேன். உனது சேவைகளுக்குச் சன்மானமாக தங்கமோ, வெள்ளியோ அல்ல, மாறாக மகிமையின் அரசராகிய நான் என்னையே உனக்குத் தருவேன். நீ எனக்காக உன்னைத் தாழ்த்திக்கொள்வதை அவமானமாக நினைத்தால், உனக்கு முன்பாக உன் கடவுளாகிய நான்பட்ட அவமானங்களை நினைவில் கொள். ஏனென்றால், நான் மண்ணில் வாழும் நண்பர்ளை அல்ல, மாறாக விண்ணகத்தில் என்னோடு வாழத்தகுதியான நண்பர்களையே தேடி வந்தேன். அதனால் தான் என்னுடைய நண்பர்களும் என்னைப் பின்தொடர்ந்தவர்களுமே என்னைக் கைவிட்டனர். நீ நோயாலும், உனக்குக் கொடுக்கப்பட்ட மற்ற வேலைகளாலும் அவதிப்படுவதைப் பற்றி கவலையும் அச்சமும் கொண்டிராதே. ஏனென்றால், நரகத்தில் நெருப்பில் வேகுவது இதைவிடக் கொடூரமானது என்பதை நினைவில்கொள்.
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் கடவுளாகிய என்னை மறுதலித்ததுபோல் வேறு ஒரு பெரிய மனிதனை மறுதலித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்?! எனது முழு உள்ளத்தோடு நான் உன்னை அன்பு செய்வதால், நீதிக்குப் புறம்பாக உனக்கு நான் ஒன்றும் செய்யவில்லை. உனது உடல் உறுப்புகள் பாவம் செய்ததால, அதற்காகப் பாவப் பரிகாரம் தேடவேண்டும். நீ செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவத்தை விட்டுவிட ஒருசில பாவப்பரிகார முயற்சிகளை எடுக்கும்போது, நான் உன்மீது கெண்டுள்ள இரக்கத்தின; பொருட்டு உனது பாவங்களை மன்னித்து, பெரிய தண்டனைகளிலிருந்து உன்னை மீட்டுக்கொள்கின்றேன்.
எனவே, நீ செய்யும் சிறிய முயற்சிகளுக்காக உன்னை நினைத்து பெருமை கொள். இவ்வாறாக, நீ கூடிய விரைவில் பாவத்திலிருந்து விடுபட்டு தூய்மைப்படுத்தப்பட்டு, அதற்கான பேறுகளையும் பெற்றுக்கொள்வாய். இவ்வாறு மணமகள் மணமகனின் விருப்பத்திற்கேற்ப செயலாற்றுவது, அவள் தன்னை மணமகனில் சரணடைவதற்கு ஏதுவாக அமைகிறது.
|