நானே அனைத்தையும் படைத்த கடவுள். நானே வல்லமை மிகுந்தவரும், வானதூதர்களின் அரசரும் ஆவேன். நானே எனக்காக உன்னதமானதொரு கோட்டையைக் கட்டி, அதில் என்னால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை அதில் வைத்தேன். ஆனால், என் பகைவர்கள் அக்கோட்டையின் அடித்தளத்தைச் சுரண்டி, அங்குள்ள எனது நண்பர்களின்மேல் தங்களது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். என் நண்பர்களை மரத்தோடு இணைத்துக் கட்டப்பட்டவர்களைப்போலவும், தாங்கள் சொல்வதைச் செய்பவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். என் நண்பர்களின் வாய்கள் கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. பசியாலும் தாகத்தாலும் அவர்கள் வாடுகிறார்கள். மேலும், பகைவர்கள் எனது நண்பர்களது கடவுளை நிந்திக்கிறார்கள். என் நண்பர்கள் உதவிக்காக கையேந்துகிறார்கள், கதறுகின்றார்கள். எனது நீதி பழிக்குப்பழி வாங்கத் துடிக்கிறது ஆனால் எனது இரக்கம் என் பகைவர்களை மன்னிக்குமாறு கூறுகிறது.
அப்போது, கடவுள் தம்மோடு நின்றுகொண்டிருந்த விண்ணக ஆன்மாக்ளைப் பார்த்து, “எனது கோட்டையைக் கைப்பற்றிக்கொண்ட பகைவர்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்ட, அவர்கள் அனைவரும் ஒரேகுரலாக இணைந்து, “ஆண்டவரே, அனைத்து நீதியும் உம்மோடு உள்ளது. உம்மிலேதான் நாங்கள் அனைத்தையும் காண்கிறோம். துவக்கமும் முடிவுமில்லாத கடவுளின் மகனாகவும்,. மனிதர்களுடைய நீதிபதியாகவும் உள்ள உமக்கே தீர்ப்பளிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தனர். அப்போது அவர் “அனைத்தையும் என்னுள்ளே காண்கிறீர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருந்தாலும், எனது மணமகளுக்காக ஒரு முடிவைச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு அவர்கள் “அந்தக் கோட்டையைச் சுரண்டியவார்களுக்கு திருடர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையும், தீமையில் வாழ்பவர்களுக்கு அடுத்தவர்களுடைய சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையும் அளிக்கப்படவேண்டும். மேலும், இவர்களால் கைப்பற்றப்பட்டுள்ள அனைவருக்கும் விடுதலை கிடைக்கவேண்டும், பசியால் வாடும் இவர்கள் நிறைவு பெற வேண்டும்” என்று பதில் கூறினர்.
இதை அடுத்து, அதுவரை நடந்தவைகளை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்து கடவுளின் அன்னை மரியாள் “என் ஆண்டவரே, எனக்கு மிகவும் பிரியமுள்ள மகனே, நீரே எனது கருவில் உண்மையான கடவுளாகவும், மனிதனாகவும் இருந்தீர். மண்ணில் வாழ்ந்த இந்தக் கருவியை நீர் புனிதப்படுத்துவதற்காக வானின்று இறங்கி வந்தீர். உனது பகைவர்கள் மீது மீண்டும் மனமிரங்கும் என்று நான் தாழ்ச்சியோடு கேட்கிறேன்” என்றுரைத்தார்.
ஆண்டவர் தமது அன்னையை நோக்கி, “உமது வாயினின்று வந்த வார்த்தைகள் அர்ச்சிக்கப்படுவதாக! அவை நறுமணமாக கடவுளிடம் மேலோங்கிச் செல்கிறது. நீரே அருள் பெற்றவரும், வானதூதர்கள் மற்றும் புனிதர்களின் அரசியுமாவீர். ஏனென்றால் உம்மாள் கடவுள் ஆறுதல் பெற்றார்,. அனைத்து புனிதர்களும் பேரானந்தம் கொண்டனர். மேலும், நீர் சிறுவயது முதலாகவே என் சித்தமே உமது விருப்பமென்று வாழ்ந்தீர். ஆகவே, நீர் கூறியது போலவே நான் மீண்டும் செய்கின்றேன்” என்றுரைத்தார்.
அதன் பிறகு அவர் விண்ணக ஆன்மாக்களைப் பார்த்து, “நீங்கள் தைரியமா போராடியதால், உங்களது அன்பின் பொருட்டு, நான் மனமிரங்குகிறேன். உங்களது செபங்களின் வாயிலாக இக்கோட்டையை நான் மீண்டும் கட்டுவேன் என்று நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்”. தீயவர்களின் கட்டாயத்திற்கு ஆளாகி, துன்புற்றவர்களை நான் காப்பாற்றுவேன். அவர்களுக்கு கணமளிப்பேன். அவர்கள் அனுபவித்த வேதனைகளுக்கு நூறுமடங்காக அவர்களை மேன்மைப்படுத்துவேன். பயங்கரவாதத்தைத் தூண்டுபவர்கள்கூட எனது இரக்கத்திற்காக மன்றாடினால், அமைதியும் இரக்கமும் பெறுவார்கள்! இதை அவமதிப்பவர்களோ எனது நீதியை அனுபவிப்பார்கள்.
அதன் பிறகு, தனது மணமகளிடம் “எனது மணமகளே, உன்னை நான் தேர்ந்தெடுத்து, எனது ஆவியால் உன்னை அலங்கரித்துள்ளேன். நீ என் வார்த்தைகளைக் கேட்கின்றார், உனது விருப்பத்திற்காகவும், நீ நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவுமே என்னிலே அனைத்தையும் கண்டுணரும் புனிதர்கள் பேசினர். நீ உடலுள்ள மனிஷியாக இருப்பதால், விண்ணக ஆன்மாக்கள் என்னுள்ளே அனைத்தையும் காண்பதைப்போல நீ காண இயலாது. நான் பேசியவை எதைக் குறக்கின்றன என்பதை இப்போது நான் கூறுகிறேன். நான் கோட்டை என்று கூறியது, எனது இரத்தத்தாலும், புனிதர்களது இரத்தத்தாலும் நான் கட்டிய பரிசுத்த திருச்சபையைக் குறிக்கின்றது. எனது நேசக் கரங்களால் அதைப் பூசி, என்னால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும், நண்பர்களையும் அதில் வைத்தேன்.
”நீதியும் இரக்கமும் நிறைந்த நீதிபதி நாமே” என்ற விசுவாசமே இதன் அடித்தளம். இக்கோட்டையின் அடித்தளம் தற்போது சூரையாடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், எல்லோரும் நான் இரக்கமுள்ளவர் என்று நம்புகின்றனர். அதையே போதிக்கின்றனர். ஆனால், நான் உண்மையுள்ள நீதிபதி என்பதை எவரும் நம்புவதில்லை. என்னை ஒரு கெட்ட நீதிபதியாக நினைக்கின்றார்கள். தனது இரக்கத்தின் பொருட்டு, தீயவர்களைத் தண்டிக்காமல் அவர்கள் மேலும் தீமை செய்வதற்கு அனுமதிப்பது கெட்ட நீதியதியே. ஆனால், நீதியும் இரக்கமும் நிறைந்த நான், சிறிய பாவத்திற்கும் தண்டனை அளிக்காமல் இருப்பதில்ல. அதைப்போலவே, எந்த ஒரு நன்மைக்கும் அதற்கான வரங்களைக் கொடுக்காமல் இருப்பதுமில்லை.
அக் கோட்டை சூறையாடப்பட்டதால், பயப்படாமல் பாவம் செய்பவர்களும், எனது நீதியை மறுதலிப்பவர்களும், எனது நண்பர்களை துன்புறுத்தி, அவர்களை நற்செயல்கள் செய்யவிடாமல் தடுப்பவர்களும், பரிசுத்த திருச்சபைக்குள் அதிகமாக புகுந்துவிட்டனர். எந்தவித ஆறுதலும்,. மகிழ்ச்சியும் எனது நண்பர்களுக;கு கொடுக்கப்படுவதில்லை. மாறாக,. அவர்கள் தண்டிக்கப்பட்டு, அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்.
அவர்கள் என்னைப் பற்றிய உண்மையைக் கூறும்போதெல்லாம், வாயடைக்கப்பட்டு வெளியில் வீசியெறியப்படுகிறார்கள். என் நண்பர்கள் என்னைப் பற்றிய உண்மைகளைக் கேட்பதற்கும்,. பேசுவதற்கும் ஏங்குகிறார்கள். ஆனால், அவர்கள் கூறுவதைக் கேட்பார் யாருமில்லை, அவர்களோடு உண்மையைப் பற்றி பேசுபவர்களும் இல்லை. இதற்கு மேலாக, அனைத்தையும் படைத்த கடவுளாகிய நான், தேவதூக்ஷனம் செய்யப்படுகிறேன். “கடவுள் இருக்கின்றாரா என்று எங்களுக்குத் தெரியாது, அப்படி இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று மக்கள் கூறுகிறார்கள். எனது படங்களைத் தரையில் தூக்கி எறிந்து, அதன் மீது ஏறி நின்றுகொண்டு, “ஏன் இவர் துன்புறவேண்டும்? இவர் துன்புற்றதால் எங்களுக்கு என்ன இலாபம்? எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதும், நாங்கள் திருப்த்தியடைவோம் - அவரது அரசையும், விண்ணகத்தையும் அவரே வைத்துக்கொள்ளட்டும்!” என்று கூவுகிறார்கள். நான் மனிதர்களுடைய மனதிற்குள் செல்ல விரும்புகிறேன். ஆனால், மக்கள் “எங்கள் விருப்பத்திற்கு மாறாக அவர் எங்கள் மனதிற்குள் வருவதற்கு முன்னதாகவே நாங்கள் சாக விரும்புகிறோம். என்று கூறுகிறார்கள்.
என் மணமகளே, இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் என்பதைப் பார்! நான் ஒரு வார்த்தையில் அவர்களைப் படைத்தததைப்போல, ஒரே வார்த்தையில் அவர்களை அழிக்கவும் முடியும். மக்கள் என் மீது எவ்வளவு வெறுப்பு கொண்டுள்ளனர் என்று பார்!! நீ எனது அன்னைக்கும், புனிதர்களுக்கும் அவர்களது செபங்களுக்காகவும் நன்றி சொல், ஏனென்றால் அவர்களது செபங்களின் பொருட்டே, நான் இப்போது இரக்கமும் பொறுமையும் கொணடு, அம் மக்களின் மீது எனது இரக்கம் மிகுந்த வார்ர்தைகளைப் பொழிய சித்தமாக இருக்கிறேன்.
அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் நான் சாந்தமடைவேன். இல்லையெனில், அவர்கள் எனது நீதித் தண்டனைக்கு உள்ளாவார்கள். திருடர்களைப்போல, பொது இடத்தில் வனதூதர்களுக்கு முன்பும், மனிதர்களுக்கு முன்பும் அவமானப்படுத்தப்பட்டு, அனைவரது கண்டனத்திற்கும் உள்ளாவார்கள். கொலையாளிகளைப்போல தூக்கிலிடப்படுவார்கள். காகங்கள் அவர்களது உடலைச் சூறையாடும். சாத்தானால் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள். தங்களது உடம்பு முழுவதும் வலியாலும், வேதனையாலும், மரத்தில் கட்டிவைக்கப்பட்ட மனிதர்களைப்போல் இடைவிடாமல் துடிப்பார்கள். கொதிக்கும் ஆறு அவர்கள் வாயில் பாயும், ஆனால் அவர்களது வயிறு நிரப்பப்படாது. மேலும், அவர்களது தண்டனை அனுதினமும் புதுப்பிக்கப்படும்.
ஆனால், எனது நண்பர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், எனது வாயனின்றுவரும் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். அவர்கள் எனது இரக்கம் மிகுந்த நீதியைக் காண்பார்கள். அவர்களை எனது அன்பான ஆடையால் போர்த்தி, அவர்களுக்கு பலம் அளிப்பேன். விசுவாசமற்ற பகைவர்கள் நீரில் களிமண் கரைவதைப்போல கரைந்து போவார்கள். எனது நீதியைக்காணும்போது, எனது பொறுமையை அவர்கள் அவதூறு செய்ததை நினைத்து அவமானத்தால் தலைகுனிவார்கள்”.
|