நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தமது மணமகளான பிரிஜித்தா தம்மை எவ்வாறு அன்பு செய்து, தம்மைப் போற்றவேண்டும் என்றும், கடவுளுக்கு எதிராக செயலாற்றும் தீயோனை வெறுக்க வேண்டுமென்றும், உலகின மீது கொள்ளவேண்டிய அன்பைக் குறித்தும் கூறியவை. |
புத்தகம் 1 - அதிகாரம் 3 |
நீ ஆராதிக்கும் உனது கடவுளும், ஆண்டவரும் நானே. நானே எனது வல்லமையால் விண்ணையும் மண்ணையும் காத்துவருகிறேன். கடவுளும், மனிதனுமான நானே, கோதுமை அப்பத்தின் வடிவில் தினந்தோறும் திருப்பலியின்போது ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். நானாகவே உன்னைத் தேர்ந்துகொண்டேன். எனது பிதாவை பெருமைப்படுத்து! என்னை அன்பு செய்! தூய ஆவியானவருக்கு கீழ்படி! என் தாய்க்கு மற்ற பெண்களைவிட மேலான வணக்கம் செலுத்து! எனது புனிதர்களுக்கும் வணக்கம் செலுத்து! எனது உதவியால் உண்மையையும், பொய்மையையும் நன்கு தெரிந்துகொண்ட உனது ஆன்மீக குரு உனக்குச் சொல்லிக்கொடுத்த உண்மையான விசுவாசத்தைக் கடைபிடி! உண்மையான தாழ்ச்சியைப் பற்றக்கொள்! கடவுள் உனக்குக் கொடுத்துள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் அவரைப் புகழ்வதைவிட சிறந்த தாழ்ச்சி வேறென்ன உண்டு.
|
விரிவுரை |
இயேசு பிரிஜித்தாவின் ஆன்ம குரு என்றழைக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த மாஸ்டர் மத்தியாஸ் என்பவர் மிகவும் நல்லவர், இறையியல் வல்லுநர், பரிசுத்த வேதாகமத்திற்கு அழகான வர்ணணையை எழுதியவர். கத்தோலிக்க மறை உண்மைகளுக்கு எதிராக செயல்படும்படி சாத்தானால் அதிகம் துன்புறுத்தப்பட்டார். ஆனால், இயேசுவின் கருணைமிகுந்த பாதுகாப்பினால் அவை அனைத்திலுமிருந்து விடுபட்டு, சாத்தானை வென்றார். இது புனித பிரிஜித்தாவின் சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசு பிரிஜித்தாவிற்கு வழங்கிய வெளிப்பாடுகள்” என்ற இந்தப் புத்தகத்திற்கு முன்னுரைகள் இவரால் எழுதப்பட்டவையே. இவர் தனது சொல்லிலும் செயலிலும் மிகவும் பரிசுத்தமானவர்.
இவர் இறந்தபோது, இயேசுவின் மணமகளான பிரிஜித்தா உரோமை நகரில் வசித்துவந்தார். பிரிஜித்தா செபம் செய்துகொண்டிருந்தபோது, “மாஸ்டர் மத்தியாசே, நீர் பேறுபெற்றவர். விண்ணகத்தில் உமக்காக கிரீடம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. முடிவில்லா ஞானத்திற்கு இப்போது வாரும்” என்ற குரல் கேட்டது. |